
“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.” – லூக்கா 22:42
பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றும் ஒரு முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவளாக வளர்வது ஒரே இரவில் நடைபெறும் காரியமல்ல, அது நீண்ட காலம் எடுத்து கற்றுக் கொள்ளும் செயலாகும். கொஞ்சம், கொஞ்சமாக ஒவ்வொரு அனுபவமாக தேவன் நம்மை பரிசோதிக்கின்றார், வளர்வதற்கான சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறார்.
நம் உணர்ச்சிகளை தூண்டும் கடினமான சூழ்னிலைகளினூடாக நாம் செல்லும் படி தேவன் நம்மை அனுமதிக்கின்றார். இப்படியாக நீங்களும் நானும் உணர்ச்சிப்பூர்வமாக எப்படி நிலையற்றவர்களாக இருக்கிறோமென்றும் அவருடைய உதவி நமக்கு எவ்வளவாக தேவைப்படுகிறதென்பதையும் அறிந்து கொள்ள இயலுகிறது.
இயேசு நமக்காக இதை உதாரணமாக்கி காண்பித்தார். நம் பாவங்களுக்காக அவர் மரித்த அந்த நாளின் முந்தின இரவிலே அவர் ஒரு மகாப் பெரிய உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பிலிருந்தார். அவர் மரிக்க விரும்பவில்லை. ஆனாலும் அவர் தம் உணர்ச்சிகளையும் தாண்டி தேவனிடம் ‘என் சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக் கடவது’ என்று ஜெபித்தார். உடனே காரியங்கள் மேம்படவில்லை, ஆனால் இயேசு முடிவிலே தமக்கு ஏற்பட்ட மகாப்பெரிய சோதனையிலே வெற்றி பெற்றார்.
நீங்கள் உங்கள் உணர்ச்சிப் பூர்வமான சோதனைகளிலே வெற்றி பெறலாம். இயேசு தமது உணர்ச்சிகளால் நடத்தப் படவில்லை. நீங்களும் நடத்தப்பட வேண்டியதில்லை. உணர்ச்சிப் பூர்வமாக பாதிக்கப்படும் போது, தேவனை முற்றிலுமாக நம்பக் கூடிய சந்தர்ப்பமாக அதைக் காணுங்கள்.
ஜெபம்
தேவனே, உணர்ச்சிப் பூர்வமான சோதனைகள் ஏற்படும் போது, உம்மை நான் நம்பலாம் என்று அறிந்திருக்கிறேன். இயேசுவை என் மாதிரியாகக் கொண்டு ‘என் சித்தமல்ல, உம் சித்தம் ஆகக் கடவது’ என்று சொல்வேன். எனக்கு எது சிறந்தது என்பதை நீர் அறிந்திருக்கிறீர். உம்மை நான் முழுவதுமாக நம்புகிறேன்.