நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். (யோவான் 14:15)
இன்றைய வசனத்தில், அவர் சொல்வதைக் கடைப்பிடிப்பதன் மூலம், அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறோம் என்று இயேசு கூறுகிறார். கடவுளிடமிருந்து கேட்பதைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம், நான் ஏற்கனவே செய்யத் தெரிந்தவற்றில் அவருக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், நான் அவரிடமிருந்து தெளிவாகக் கேட்க மாட்டேன் என்ற உண்மையை மீண்டும் தெரிந்து கொள்கிறேன். கீழ்ப்படிதல் இல்லாவிடில், குற்றமுள்ள மனசாட்சி நமக்கு இருக்கும். அந்த மனசாட்சி இருக்கும் வரை, நம்மிடம் நம்பிக்கையும், விசுவாசமும் இருக்க முடியாது (பார்க்க 1 யோவான் 3:20-24).
ஒரு கிறிஸ்தவரின் குறிக்கோள்கள், ஒரு அவிசுவாசியின் இலக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். கடவுளுக்கு சேவை செய்யாதவர்கள் பணம், பதவி, அதிகாரம் மற்றும் பொருட்களை விரும்புகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நமது முதன்மையான குறிக்கோள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். கடவுளுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் பல வருடங்களாக ஆலயத்திற்குப் போனேன். நான் கடவுள் ஏற்றுக் கொள்ளக்கூடிய, மதம் சார்ந்த ஒரு முறையைப் பின்பற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அவருடைய கொள்கைகளால் தினமும் வழிநடத்தப்படுவதற்கு நான் என்னை முழுமையாக அர்ப்பணம் செய்யவில்லை. உங்கள் முழு வாழ்க்கையையும் கடவுளுக்குத் திறந்து, வாழ்க்கையில் உங்கள் ஆசிரியராக இருக்க பரிசுத்த ஆவியானவரை அழைக்கவும். அவருடைய வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். நீங்கள் தோல்வியுற்றால், மன்னிப்பு கேட்டு, மீண்டும் தொடங்குங்கள். குற்ற உணர்வுடன் நேரத்தையும், சக்தியையும் வீணாக்காதீர்கள். ஏனென்றால் கிறிஸ்துவில் நாம் எப்போதும் ஒரு புதிய தொடக்கத்தைப் பெற முடியும். கீழ்ப்படிதலைப் பற்றி ஜெபிக்கவும், அதைப் படிக்கவும், ஒவ்வொரு நாளும் அதைத் தீவிரமாகப் பின்பற்றவும். இந்த வழியில், நாம் கடவுள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறோம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நாம் அனைவரும் தவறு செய்கிறோம். ஆனால் நாம் கைவிட மறுக்கும் வரையில் நாம் நமது இலக்கை அடைவோம்.